திண்டுக்கல்: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆடு வியாபாரி கிருஷ்ணன்(50). இவர் ஆட்டுக்கு மருந்து வாங்க திண்டுக்கல் சென்றுவிட்டு மீண்டும் வேடசந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தபோது, காக்கா தோப்பு பிரிவில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.
அப்போது அவருக்கு பின்னந்தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பணியில் இருந்த டாக்டர் லோகநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்தனர்.
தகவலறிந்த கிருஷ்ணனின் உறவினர்கள் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்து சுயநினைவு இல்லாமல் இருந்த அவரை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 1033 வாகனம் மூலம் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அவரின் பாக்கெட்டில் இருந்த 48,538 ரூபாய் பணத்தை 108 ஆம்புலன்ஸ் செவிலியர், மருத்துவ உதவியாளர், பத்திரமாக கிருஷ்ணன் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மருத்துவப் பயணியாளர்களின் இச்செயலுக்கு பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.