தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மக்களவை, சட்டப்ரேவை இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் ருக்மணி தேவி, சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அரூர் (தனி) திலீபன், பாப்பிரெட்டிபட்டி சதீஸ் ஆகியோர் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தருமபுரி மாவட்டம் அரூரில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, வாக்கு சேகரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது பேசிய சீமான், "பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் மாறி, மாறி ஆட்சி செய்துவருகின்றன. இந்த இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டிற்கு எதையும் செய்யவில்லை. இந்த இரண்டு கட்சிகளும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, மனிதர்களுக்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
நம் தமிழர்கள் ஆந்திராவில் 20 பேரும், தூத்துக்குடியில் 13 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அப்போது மோடியிடமிருந்துகண்டனமில்லை; வருத்தம் இல்லை.
ஆனால், இப்போது மாதத்திற்கு நான்கு முறை தமிழ்நாட்டிற்கு தேர்தலுக்காக வருகிறார். 3000 கோடியில் பட்டேலுக்கு சிலை வைத்துள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் பாதி நாடு அழிந்துவிட்டது. நிவாரணம் இல்லை. இந்த நாட்டை மோடி, ராகுல் மட்டும்தான் ஆள முடியும் என்ற விதியில்லை.
இந்த தேர்தல் உள்நாட்டு, வெளிநாட்டுக்கு தேவையான தரகர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற உள்ளது. மக்களுக்கான நல்ல தலைவர்களை அல்ல.
தமிழ்நாடு போராட்டக்களமாக மாறிவருகிறது. தேர்தல் பறக்கும் படை காய் விற்பவரையும், மருத்துவமனைக்கு செல்பவரையும் பிடிக்கிறது. வாக்குக்கு பணம் கொடுப்பவரை வேடிக்கை பார்த்து வருகிறது" என குற்றம்சாட்டியுள்ளார்.