தர்மபுரி மாவட்டம் செம்மான்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாது. அவர் இன்று(அக்.12) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் அவர், "செம்மாண்டகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்தான் இதுவரை ஊராட்சி மன்ற கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஆனால் தற்போதுள்ள ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி, அவரது வீட்டின் அருகே உள்ள குண்டல்பட்டி பள்ளி வளாக கட்டடத்திற்கு அலுவலகத்தை மாற்ற முடிவு செய்துள்ளார்.
அந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. அத்துடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை குண்டல்பட்டி பள்ளி வளாகத்திற்கு மாற்றக் கூடாது என தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் பானு பூமணி குண்டல்பட்டி பள்ளி வளாக கட்டமொன்றில் செம்மாண்டகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் என பெயர் எழுதி அலுவலகாம மாற்றி ஆவணங்களை அங்கு வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை வழங்கும் நிகழ்ச்சியையும் அங்கு நடத்தி வருகிறார்.
எனவே ஊராட்சி நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை பயன்படுத்தாமல் மாற்று இடத்தைப் பயன்படுத்திவரும் பானுபூமணி மீது கிராம பஞ்சாயத்து சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "தலித் ஊராட்சித் தலைவரை தரையில் அமர வைத்தது கண்டிக்கத்தக்கது" - கே.என். நேரு