கரோனா நோய்த் தொற்று நாடு முழுவதும் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உணவின்றி தவிக்கும் ஏழை, எளிய குடும்பத்தினா், வயதானவர்கள், ஆதரவற்றவர்களுக்கு பல்வேறு இடங்களில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் உணவு, அத்தியாவசியப் பொருள்களை நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம் அரூர் மேல் பாட்ஷா பேட்டை சுன்னத் ஜமாத் சார்பில், 500 ஏழை, எளிய குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ வீதம் ரூ.3 லட்சம் மதிப்பில் அரிசி வழங்கப்பட்டது. இதனை அரூர் சார் ஆட்சியர் பிரதாப் பொதுமக்களுக்கு வழங்கினார்.
அப்போது, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தும் நிவாரணப் பொருள்களை பெற்றுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அமைச்சர் நிவாரணம் வழங்கிய இடத்தில் மக்களிடையே தள்ளுமுள்ளு