தருமபுரி மாவட்டம் சிவாடிப் பகுதியிலிருந்து ரயில்வே இரும்பு பாலங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் வளைவு பகுதியில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டிச் சென்ற திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த செல்வம், அதே லாரியில் சென்ற சேலம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி சென்றபோது, அதற்கு அருகாமையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நல்லம்பள்ளி மேல் பகுதியைச் சேர்ந்த சின்னவன், அதே ஊரைச் சேர்ந்த அரிய கவுண்டர் ஆகிய இருவரும் லாரி கவிழ்ந்ததில் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து, விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் தொப்பூர் காவல்துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தொப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அந்தரத்தில் தொங்கிய மினி லாரி- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்!