தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கெங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் வினோத் நல்லம்பள்ளியில் நகைக்கடை நடத்திவருகிறார்.
வழக்கம்போல இன்று கடையை மூடிவிட்டு நகைகளை தனது காரில் வீட்டுக்கு கொண்டுசென்றார். அப்போது நல்லம்பள்ளி சேசம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வினோத்திடம் 176 பவுன் தங்க நகைகள், 35 ஆயிரத்து 700 ரூபாயை உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்றதாகப் பறிமுதல்செய்தனர்.
இதனையடுத்து, பறிமுதல்செய்யப்பட்ட நகை, பணத்தை தர்மபுரி சார் ஆட்சியர் பிரதாப்பிடம் ஒப்படைத்தனர். நகை, பணத்தை ஆய்வுசெய்த பிரதாப் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்.
இந்நிலையில், தர்மபுரி தொப்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளரிடமிருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்செய்தனர்.
பறிமுதல்செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களைக் கொண்டுவந்த அவர் கடந்த ஐந்து நாள்களாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம் என இரண்டு அலுவலகங்களுக்கும் சென்று உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கச் சென்றபோது அலுவலர்கள் முறையான பதில் தெரிவிக்காததால் அவர் வழியறியாமல் அலைந்துதிரிந்து கொண்டுள்ளார்.
அரசு அலுவலர்கள் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல்செய்யப்பட்ட பணத்தை உரிய ஆவணங்களைக் காட்டி எவ்வாறு பெறுவது என்பது குறித்த விளக்கத்தைப் பணம் பறிகொடுத்த உரிமையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது பணம் பறிகொடுத்த நபர்களில் வேண்டுகோளாக உள்ளது.