தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தொட்டம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் மாதையன் மனைவி அலமேலு(60). இவர் தனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் பூந்தோட்ட மின் இணைப்பு மூலம் மின்சாரம் பெற்று விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு ஒரு முனை மின்சார இணைப்பை மாற்றி, மும்முனை மின்சாரம் வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், இந்த மும்முனை மின் இணைப்பு பெற அலமேலு தொட்டம்பட்டியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மும்முனை இணைப்பு மின்சாரம் பெற சில மாதங்களுக்கு முன்பு மின்வாரிய அலுவலகத்தில் மின் வணிக ஆய்வாளராக பணியாற்றும் மணி என்பவரை அணுகியுள்ளார். இந்த இணைப்பு வழங்க மின் வணிக ஆய்வாளர் மணி, அலமேலுவிடம் ரூபாய் 5000 தனக்கு கொடுத்தால் உடனடியாக மின்னிணைப்பு மாற்றி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அலமேலு முதல் தவணையாக அவரிடம் கடந்த 4 மாதத்திற்கு முன்பு 1,500 ரூபாய் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மின் இணைப்பு பெறுவதற்காக அலமேலு மின் வணிக ஆய்வாளர் மணியை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அவர், மீதித் தொகையை கொடுத்தால் மட்டுமே, மின் இணைப்பு வழங்குவேன் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அலமேலு இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அலமேலுவிடம் கொடுத்தனர்.
அதனைப்பெற்றுக்கொண்ட அலமேலு, மின் வணிக ஆய்வாளர் மணியை சந்தித்து மீதித் தொகையான 3,500 ரூபாயை கொடுத்தார். அப்போது மறைந்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், மின் வணிக ஆய்வாளர் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.