மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஏற்றுமதி விழிப்புணர்வு நிகழ்ச்சி தருமபுரியில் நேற்று நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், "தருமபுரி மாவட்ட விவசாயம் சார்ந்த மாவட்டம். இங்கே அதிகளவில் விளையக்கூடிய மரவள்ளிக்கிழங்கு பயன்படுத்தி நெகிழிப் பொருள்களுக்கு மாற்று பொருள்களைத் தயாரிக்க இளைஞர்கள், தொழில் துறையினருக்கு உதவிடும்வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியைப் பயன்படுத்தி தொழில் தொடங்க வேண்டும்.
இரண்டாவதாக, நாட்டிலேயே அதிகளவு மாம்பழம் விளைகின்ற மாவட்டமாக தருமபுரிதான் திகழ்கிறது. அதை ’சேலத்து மாம்பழம்’ என்று தவறாக அழைக்கிறார்கள். நம் மாவட்டத்தில் விளையக்கூடிய விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தருமபுரி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் அதிகளவில் வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வேலை செய்துவருகிறார்கள். அமெரிக்காவைவிட தருமபுரி மாவட்டத்தில்தான் 84 விழுக்காட்டிற்கும் மேலான மாணவ-மாணவியர் பள்ளிக் கல்வியிலிருந்து உயர்கல்விக்குச் செல்கிறார்கள்.
படித்து முடித்த பட்டதாரிகளுக்குத் தேவையான வேலைவாய்ப்புகள் இந்த மாவட்டத்தில் இதுவரை உருவாக்கப்படவில்லை. அதனை மாற்றும்வகையில் எனது பணிகள் உறுதியாக அமையும்.
![Dharmapuri will be 10th rank in industrial growth - DMK MP SenthilKumar](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-export-programme-mp-speech-vis-7204444_18022020150730_1802f_01252_121.jpg)
தமிழ்நாட்டளவில் தருமபுரி மாவட்டம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் தொழில் துறையில் 10ஆவது இடத்தைப் பிடிக்கும். நமது மாவட்டத்தில் மின்கலம் (பேட்டரி) தயாரிக்கும் தொழிற்சாலைகள் கொண்டுவர, ஜப்பான் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுவருகிறோம்" எனப் பேசினார்.
இதையும் படிங்க : 'தடியடி நடத்திவிட்டு இஸ்லாமியர்கள் மீதே அரசு பழிபோடுகிறது' - ராமகிருட்டிணன்