தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க, பெற்றோர்களிடம் அரசு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தியது. அதன்படி இன்று (ஜன.19) முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
இந்நிலையில் தருமபுரியில் தனியார் பள்ளி கூட்டமைப்பின் தலைவர் டிஎன்சி. இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 10,12ஆம் வகுப்பு படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முழுவதும் பின்பற்றப்படும். ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலையை கணக்கிடுதல், தனி மனித இடைவெளி பின்பற்றப்படும்.
மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் தூய்மைப் படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்படும். மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்றவை இருந்தால், அவர்களுக்காக பள்ளியில் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோர் அனுமதி கடிதத்துடன் வந்தால் மட்டுமே பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள். ஏப்ரல் மாதம் முதல் பள்ளி வாகனங்கள் எந்தவித கட்டுப்பாடுகள் இன்றி, இயக்க அனுமதிக்க வேண்டும்.
நீண்ட காலமாக பள்ளிகள் திறக்காததால் மின் கட்டணம், சொத்துவரி போன்றவற்றிக்கு தனி அரசாணை பிறப்பித்து விலக்கு அளிக்க வேண்டும். இல்லையென்றால் கூடுதல் கால அவகாசம் அரசு வழங்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்' - அமைச்சர் விஜயபாஸ்கர்