தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நீரேற்று நிலையத்தில் கடந்த 25ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று உள்ளே நுழைந்துள்ளது. இரவு பணியில் இருந்த பணியாளர் அதனை நாய் என நினைத்து துரத்திவிட்டு சென்றுள்ளார்.
பின்பு அடுத்த நாள் அங்கு பணியில் இருந்த பணியாளர் சிறுத்தையை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரி கேசவன் தலைமையிலான குழுவினர் வந்து சோதனையிட்டனர். சிறுத்தை அங்கு இல்லாததைத் தொடர்ந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
![Forest officials with the cage](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/img-20190327-wa01241553704545687-65_2703email_00898_434.jpg)
பின்னர் மற்றொரு வனத்துறை குழுவினர், மீண்டும் அதே பகுதியில் சோதனை செய்தபோது குடிநீர் குழாயில் சிறுத்தை பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குழாயின் ஒருமுனையில் வலையை கட்டிவிட்டு மற்றொரு முனையில் இறைச்சியுடன் கூண்டு வைத்தனர். இதைப் பார்த்த சிறுத்தை மாலை 7 மணியளவில் இறைச்சியை திண்பதற்கு வந்த போது கூண்டில் சிக்கியது.
இதையடுத்து கூண்டில் சிக்கிய சிறுத்தையை மயக்கமடைய செய்து வனத்துறையினர், அதனை பத்திரமாக அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.