தருமபுரி மாவட்டம் பிடமனேரி பகுதியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (70). இவர் தன் மகன் வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில், இன்று (அக். 22) வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு, அவரது கழுத்திலிருந்து 5 சவரன் நகையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வீட்டிற்கு வந்த அவரது மகன் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மூதாட்டியின் எதிர் வீட்டிலுள்ள சோமசுந்தரம், அவரது நண்பரும் சேர்ந்து கொலைசெய்தது தெரியவந்தது.
இதையடுத்து, சோமசுந்தரத்தை கைதுசெய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாகவுள்ள அவரது நண்பரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.