தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் உள்ள விவசாயிகள், எட்டு வழி சாலை அமைப்பதற்கு நிலம் தர மாட்டோம் என்று அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே மனு அளித்துள்ளனா். தமிழ்நாடு முதலமைச்சர், எட்டு வழி சாலைக்கு 92 விழுக்காடு விவசாயிகள் ஆதரவு தெரிவிப்பதாக சமீபத்தில் பேசினார்.
இந்த நிலையில், அரூர் பகுதியில் எட்டு வழி சாலை அமைய நிலம் வழங்கிய நபா்கள் குறித்த வெள்ளை அறிக்கை விபரம் கேட்டு, அப்பகுதி விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னை- சேலம் எட்டு வழி சாலை திட்டத்தால் பொது மக்களுக்கு எந்த பலனும் கிடையாது. சென்னையில் இருந்து சேலம் செல்ல ஏற்கனவே உள்ள சாலைகளே போதுமானது. விவசாய நிலங்கள் அழித்து இந்த சாலை அமைக்க விட மாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறையைக் கொண்டு விவசாயிகளை மிரட்டுவதைக் கைவிட்டு, எட்டு வழி சாலை திட்டத்தை முற்றிலும் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனா்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய சார் ஆட்சியா் பிரதாப், "இது குறித்து எந்தத் தகவலும் என்னிடம் இல்லை. சம்பந்தப்பட்ட துறையினரிடம் விசாரித்து தகவல் தருகிறேன்" என்று கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: ’எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினால் யுத்தம் செய்வோம்' - இயக்குநர் கௌதமன்