கடலூர் மக்களவைத் தொகுதியின் அமமுக வேட்பாளர் காசி.தங்கவேலுக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவை வஞ்சித்த மோடி, அவரை டாடி என்றழைத்த தமிழ்நாட்டு அரசின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லையெனக் கூறியவர் ஜெயலலிதா. அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு தடை கேட்டு நீதிமன்றம் சென்றதோடு, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவர் சிறையில் இருந்திருப்பார் என்று கூறியவர்கள், தற்போதைய ஆட்சியாளர்களை மானங்கெட்டவர்கள் என்று கூறியவர்களுடன் இவர்கள் கூட்டணி வைத்திருப்பதால் இதனை மானங்கெட்ட கூட்டணி என்று கூறுகிறேன்.
மதச்சார்பற்ற கூட்டணி என்று கூறும் திமுக, இந்து மதத்தை விமர்சித்து வருகிறது. தற்போது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் திமுகவை கைவிட்ட நிலையில், இந்துக்களுக்கு திமுக விரோதியல்ல, எங்கள் வீட்டு பெண்களும் கோயிலுக்குச் செல்வார்கள் என்று கூறிவருகிறார் மு.க.ஸ்டாலின்.
எந்த மதத்தினரும், யாரையும் தரம் தாழ்த்துவது இல்லை. ஆனால், இந்து மதத்தை கண்டுபிடித்தவர்கள் போல கூறிக்கொள்ளும் பாஜக தங்களை இந்துக்களுக்கு பாதுகாவலர்கள் என்று கூறுகிறது. திமுக இந்து எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளது. ஆனால், அரசியல்வாதிகள் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்கு தண்ணீர் பிரச்னை, நீட் தேர்வு பிரச்னை, என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பிரச்னை, விவசாய விளை பொருட்களுக்கு விலை கிடைக்காமை இவ்வாறு பல்வேறு தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் உள்ளன. கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுகவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது” என்றார்.