உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து மாநிலஅரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் போர்க்கால அடிப்படையில் ஜூலை 31 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூரில் நேற்றுவரை கரோனா தொற்றால் ஆயிரத்து 859 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 58 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் நேற்றுவரை ஆயிரத்து 390 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இன்று மேலும் 25 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் கடலூர் மாவட்டத்தில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.