கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தீர்த்தாம்பாளையம் பகுதியில் சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கிச் செல்லும் புறவழிச்சாலையில் சார் ஆய்வாளர் தாமோதரன் தலைமையிலான பறக்கும் படை அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரைக்காலிலிருந்து கடலூர் நோக்கி, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் சென்றுகொண்டிருந்தார்.
அவரது காரை நிறுத்தி சோதனைசெய்ததில், உரிய ஆவணங்களின்றி அவர் ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொண்டுசெல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடமிருந்து பணத்தைப் பறிமுதல்செய்த பறக்கும் படையினர் சிதம்பரம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், நகை வியாபாரியான இவரிடம், இந்தப் பணத்திற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளது. அவற்றை விரைவில் சமர்பிப்பதாகக் கூறினார். இதையடுத்து, அலுவலர்கள் ஆவணத்தைச் சமர்பித்துவிட்டு, பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.