கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மகன் கோழிபாண்டியன்(வயது 35). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற 8 வழக்குகள் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் உள்ளது. இவர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
![கோழிபாண்டியன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cdl-01-rowdy-bomb-blast-vis-script-photo-7204906_21082019094146_2108f_1566360706_126.jpg)
இந்நிலையில் நேற்று இரவு கோழிபாண்டியனும், மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டனும் சாப்பிடுவதற்காக அண்ணாமலை நகரில் இருந்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். திடீரென, இருவரும் தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கோழிபாண்டியன் மீது வீசினர். அவர் மீது நாட்டு வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் தலை மற்றும் உடல் சிதறி கோழிபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டனும் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். கோழிபாண்டியன் இறந்ததை உறுதி செய்த இரண்டு வாலிபர்களும், மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அண்ணாமலை நகர் காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரவுடி கோழிபாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச்சென்ற இரண்டு வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.