விழுப்புரம் மாவட்டம் குட்டியாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரின் மகள்(19) தனலட்சுமி, வடமூர் கிராமத்தில் அவரது பாட்டி ராதா வீட்டில் தங்கி, அங்கு இருக்கும் சிப்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். அதேபோல், களமருதூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவரின் மகன் சக்திவேல்(23). அதே கடையில் வேலை செய்து வந்தார். அங்கு இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம் வடமூர் கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தனலட்சுமி இருந்துள்ளார். அங்கு சென்ற சக்திவேல், தனலட்சுமியிடம் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், தனலட்சுமியைச் சரமாரியாகக் கத்தியால் குத்தியதில், அவளின் தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் உடனடியாக, அவரை ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
இச்சம்பவத்தில் தலைமறைவாக இருந்து வந்த சக்திவேலை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், நடத்திய விசாரணையில், சக்திவேல் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்ததும், தனலட்சுமி காதலை ஏற்க மறுத்ததாகவும்; இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் அவளைக் கத்தியால் குத்தியதாகவும் தெரிய வந்தது.
இதையும் படிங்க: வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை!