கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரம் புதுக் காலணியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை சாயிபாபு (43) இரண்டாம் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கோஜன் (7), கோகுல் (6) என இரு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். சாயிபாபு தனது இரு மகன்களுடன் அதே வீட்டில் வசித்துவந்தார்.
குடும்பத்தில் வருமானம் இல்லாத காரணத்தால் சாயிபாபு அக்கம்பக்கத்தின்ரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக் கேட்டதால் கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து சாயிபாபு தனது மகன்களுடன் திம்மராவுத்தன்குப்பத்தில் உள்ள உறவினர் பழனியம்மாள் வீட்டில் தங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் தந்த மன உளைச்சலால் தனது மகன்களை கொன்றுவிட்டு தலைமறைவாகி விடலாம் என திட்டமிட்டுள்ளார் சாயிபாபு.
அதன்படி, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி சாயிபாபு பழனியம்மாளிடம் மகன்களை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு, தனது இரு மகன்களையும் கிணற்றுக்குள் தள்ளி விட்டுள்ளார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் சத்தம் போடவே அவர்களுக்கு பயந்து சாயிபாபுவும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின் மூவரையும் கிணற்றிலிருந்து மீட்டதில், கோஜன், கோகுல் ஆகிய இருவரும் இறந்துவிட்டனர். ஆனால், சாயிபாபு மட்டும் பிழைத்துக் கொண்டார். இச்சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
மகிளா நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கினார். இதில், கொலை செய்த சாயிபாபுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தற்கொலைக்கு முயன்றதற்காக கூடுதலாக ஒரு வருடம் சிறை தண்டனையும் சாயிபாபுவுக்கு வழங்கப்பட்டது.