கடலூர்: திட்டக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட கொட்டாரம் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனவேல். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சென்னையைச் சேர்ந்த அனிதா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் ஒரு மாதத்தில் குடும்ப கஷ்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு துபாய் செல்ல தனவேல் திட்டமிட்டார்.
துபாய் தேரா பகுதியில் பிக் ட்ரீம் ஸ்டார் டெக்னிக்கல் சர்வீஸ் எல்.எல்.சி. என்ற நிறுவனத்தில் போர்வெல் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு அங்கு குப்பைகளை எடுக்கும் வேலை முதல் அனைத்து வேலைகளும் வழங்கி துன்புறுத்தி வருவதாகத் தெரிகிறது.
கடந்த ஒரு மாத காலமாக தனவேலுக்கு உடல்நிலை சரியில்லாமலும், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அந்த நிறுவனத்தின் மேலாளரும் கேரள மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவருமான எட்வின் என்பவரிடம் கேட்டார். அப்போது ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் அனுப்பி வைப்பதாக அவர் கூறியதாக தெரிகிறது.
மேலும், 'பணம் கொடுத்தால் அனுப்பி வைக்கிறேன், இல்லையென்றால் நீ எங்கு வேண்டுமானாலும் சென்று பார்த்துக்கொள்' என்று மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், தன்னை மீட்டு தனது குடும்பத்தாருடன் சேர்த்து வைக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கும், மத்திய அரசுக்கும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த செய்தி ஈடிவி பாரத்தில் நேற்று முன்தினம் (டிச. 14) வெளியானது. இந்நிலையில் அவர் தனக்கு உதவி கிடைத்துவிட்டதாக நன்றி தெரிவித்து நேற்று (டிச. 15) வீடியோ வெளியிட்டார்.
அதில், துபாயில் ஈமான் கலாச்சார மையம் சார்பில் பொதுச் செயலாளர் யாசின் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கவுசர் ஆகியோர் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். உரிமையாளரிடம் பேசி சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என வீடியோவில் பேசியுள்ளார். மேலும் மூன்று நாட்களில் சொந்த ஊருக்கு திரும்ப உள்ளதாகவும், உரிமையாளர் பற்றி தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘என்னைக் காப்பாற்றுங்கள்’ - துபாயில் இருந்து கோரிக்கை வைத்த கடலூர் இளைஞர்