கடலூர் மாவட்டம் தொண்டங்குறிச்சியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் நாராயணசாமி (56), தனது இருசக்கர வாகனத்தில் ஜூலை 4ஆம் தேதி சேலம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈரோடு மாவட்டம் ஓடைகாரன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் சண்முகம் (38), லிஃப்ட் கேட்டு வாகனத்தை நிறுத்தி உள்ளார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி, நாராயணசாமியை தாக்கி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ. 500 பறித்து சென்றுள்ளார்.
இது தொடர்பாக நாராயணசாமி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சண்முகத்தை கைது செய்து விசாரித்ததில், இவர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும், வேப்பூர் காவல் சரகம் பெரிய நெசலூர் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவர் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 பவுன் நகை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், திருடிய நகை கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே வேப்பூர் காவல் நிலையம், பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு, குன்னம், அரியலூர் டவுன் காவல் நிலையம், ஆகிய காவல் நிலையங்களில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும், இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் சண்முகத்தை வைக்க ஆணையிட்டார்.