கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அம்மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அருகே தில்லைவிடங்கன் ஊராட்சி கீழ்காட்டி கிராமத்தில் நடைபெற்றுவரும் மேம்பாலப் பணி, லால்புரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணி, சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட தில்லை காளியம்மன் ஓடை தூர்வாரும் பணி, சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் பள்ளியில் மாணவர்களின் வகுப்பறை, சமையல் கூடம், சுற்றுப்புறத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
![Cuddalore collector inspected](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cdl-03-collector-inspection-photo-script-7204906_06112019172827_0611f_1573041507_745.jpg)
அதனைத் தொடர்ந்து பெராம்பட்டு-திட்டுகாட்டூர் இணைப்பு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி, எருக்கன்காட்டுப் பகுதி சாலை அமைத்தல், பலப்படுத்தும் பணி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம் அக்கரை ஜெயங்கொண்டான் ஏரி, வேலங்குடி பழைய கொள்ளிடம் ஆறு, வீராணம் ஏரி ராதா மதகு, வீராணம் ஏரி வாழக்கொல்லை புது வாய்க்கால், புவனகிரி பேரூராட்சியில் செயல்பட்டுவரும் ஸ்ரீ ராகவேந்திரா மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின்போது அப்பகுதி மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து ஆட்சியர் கூறுகையில், "பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுவரும் பாலங்கள், நிலம் கையகப்படுத்தும் பணிகள், ஆறு, ஓடைகளைத் தூர்வாரும் பணிகள், சாலை சீரமைக்கும் பணிகள் மிகுந்த தரத்துடனும் விரைவாகவும் பணிகளை முடித்திட வேண்டும்.
![Cuddalore collector](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cdl-03-collector-inspection-photo-script-7204906_06112019172827_0611f_1573041507_529.jpg)
மேலும் அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகள், சமையலறை, கழிவறைகள், சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மையாக வைத்துக்
கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளின் விடுதிகளில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவானது தரமானதாக இருக்க வேண்டும். இப்பணிகளைச் சரிவர மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.
இந்த ஆய்வின்போது சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், வேளாண்மை உதவி இயக்குநர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள், வட்டாட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
![Cuddalore collector](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cdl-03-collector-inspection-photo-script-7204906_06112019172827_0611f_1573041507_375.jpg)
மேலும் படிக்க: ’பஞ்சாயத்து செயலர்கள் மனது வைத்தால் எல்லாம் நடக்கும்'.. மாவட்ட ஆட்சியர் கருத்து