உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளி உள்ளிட்டவை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். மருத்துவம் தொடர்பான ஏதேனும் சந்தேகமிருந்தால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூரில் நேற்று(ஆகஸ்ட் 16) வரை கரோனா தொற்றால் 6,691 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(ஆகஸ்ட் 17) மேலும் 391 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,082 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,527 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சிகிச்சை முடிந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 4,235 ஆக உள்ளது. அதேசமயம் 83 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.