சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் சிவகாசி ஸ்டேண்டர்ட் பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதற்காக மண்டபம் முழுவதும் மின் விளக்குள், மலர் தோரணங்கள், வண்ண சீலைகள், பச்சை இலைகள் ஆகியவற்றால் பிரமாண்டமாக அலங்கரிகப்பட்டு இருந்தது. புனித இடமான இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் இதுவரை எந்த திருமண விழாவும் நடைப்பெறாத நிலையில் இந்த திருமணத்திற்கு கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தது சிதம்பரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக புகழ் பெற்ற இக்கோயில் சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர்களால் பாடல்பெற்ற தலமாகும். மேலும் இதனை பூலோக கைலாசம் என்று பக்தர்கள் குறிப்பிடுவார்கள். இக்கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பக்தர்களால் ராஜசபை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன உற்சவத்தின்போது ஒரு காலை தூக்கி ஒற்றை காலுடன் நிற்கும் நடராஜர் சிலையை வைத்து வழிபடும் போது 999 தூண்கள் கொண்ட இந்த மண்டபம் 1000 கால் மண்டபமாக மாறியது என்று பக்தர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
இந்த ஆயிரங்கால் மண்டபத்தில்தான் மாணிக்கவாசகர் ஊமைப்பெண்ணை பதிகம்பாடிப் பேச வைத்தார். சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணத்திற்கு இறைவனே, உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்து அருளியதும், பின்னர் நூல் அரங்கேறியதும் இதே மண்டபத்தில் தான். இவ்வளவு சிறப்புடைய இந்த மண்டபத்தில் ஆன்மீக நிகழ்ச்சி தவிர வேறு எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி அளித்தது இல்லை. இந்நிலையில் இங்கு சிவகாசி ஸ்டேண்டர்ட் பயர் ஒர்க்ஸ் பங்குதாரர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி திருமணம் நடத்தியது கடவுளை அவமதிப்பதற்கு ஈடானது என்று பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.