மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு இப்போராட்டத்தை விவசாயிகள் தொடங்கினர். இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு
போராட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. ஆனால் இன்னமும் அதற்கு முறையான நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடி பதவியேற்று, நேற்றோடு (மே.26) ஏழு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இந்நாளை கறுப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் எதிர்ப்பு கடைப்பிடிக்க 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது. இதற்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி உள்பட 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், விவசாயிகள் கறுப்பு கொடி ஏந்தி தங்கள் போராட்டத்தை பதிவு செய்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
அதன்படி, கடலூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், கறுப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பட்டன. மேலும், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான கரோனா தொற்று தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், கடலூர் திமுக நகர செயலாளர் ராஜா, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:’கரோனாவால் உயிரிழக்கும் தொழிலாளி குடும்பத்துக்கு மாத சம்பளம் தொடரும்’ - டாடா ஸ்டீல் அறிவிப்பு