நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் பொறியாளர் கார்த்திக் என்பவரை வேட்பாளராக விருதாச்சலம் சட்ட மன்ற உறுப்பினரும் கடலூர் மாவட்ட செயலாளரும் வி.டி. கலைச்செல்வன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பின்னர் வி.டி.கலைச்செல்வன் பேசுகையில், "தமிழகத்தில் மோடியா அல்லது இந்த லேடியா என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதற்கு நேர் எதிராக தற்போது அதிமுக எடப்பாடி அரசு பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சட்டமன்றத்தில் படத்தை வைக்கக்கூடாது, அவர் உயிருடன் இருந்திருந்தால் தற்போது சிறைக்கு சென்று இருப்பார் என்று கூறிய பாமகவோடு கூட்டணி வைத்துள்ளது மக்களிடம் அதிமுக தொண்டர்களிடம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மக்கள் எடப்பாடிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தகுந்த பாடத்தை இந்த தேர்தலில் கற்றுக்கொடுப்பார்கள். தற்போது அதிமுக அமைத்துள்ள கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. ஜெயலலிதா இறந்தபோது இவர்கள் எங்கு இருந்தார்கள் என்று தெரியவில்லை. அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாக்கு கூட செலுத்த மாட்டார்கள். நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் உருவாக்குவார்கள்" என்றார்.