கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர், தனது நண்பர்களுடன் இணைந்து கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் பணிகளை செய்து வந்தார்.
மேலும், இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டை அடிக்கடி விளையாடி வந்தார். இந்த சூதாட்ட விளையாட்டை நிறுத்திக் கொள்ளும்படி அவரது மனைவி சண்டையிட்டு கடந்த 15 நாள்களுக்கு முன்பு அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இருந்தபோதிலும், ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய ஜீவானந்தம், தனது நண்பருக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, 20 ஆயிரம் ரூபாயை எடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்காக பயன்படுத்தி, பணத்தை இழந்துள்ளார். 20 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் இழந்ததால் மனமுடைந்த ஜீவானந்தம், நேற்று (நவ.02) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், ஜீவானந்தம் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், நேற்றிரவு (நவ.02) மாச்சாம்பாளையம் பகுதியில் இளைஞர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தவர் தற்கொலை!