கோயம்புத்தூர்: கார் வெடித்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய ஜமாத் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பர் தலைமையில் அவ்வமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையாளரை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல் ஜப்பர், "தீவிரவாத செயலில் ஈடுபட முயற்சி. கடவுள் கோவை மாநகர மக்களை காப்பாற்றி இருக்கிறார். தீவிரவாத செயலில் ஈடுபட்டதற்கான தண்டனையை கடவுள் வழங்கி உள்ளார். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் இன்னும் கோவையில் இருக்கிறார்கள்.
அவர்களை கண்டுபிடித்து தீவிரவாதத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க ஐக்கிய ஜமாத் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தந்து இணைந்தும் செயல்படும்.
மாநகர உளவுப்பிரிவு செயல்படவில்லையோ அவர்கள் முறையாக அரசுக்கு தகவல் சொல்லவில்லையா என்ற கேள்வி எழுகிறது. மாநகரின் முக்கிய பகுதியில் செயல்படும் குனியமுத்தூர், உக்கடம், பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையங்களில் புதிதாக போடப்பட்ட உளவுத்துறை காவலர்களை எடுத்துவிட்டு, அனுபவம் வாய்ந்த பழைய காவலர்களையே பணியமர்த்த வேண்டும்.
அப்போது தான் உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டு குற்றங்களை ஒழிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீடியோ: இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று வானவெடி வெடித்த இளைஞர்