கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அடுத்த செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் அப்பகுதியில் அர்ஜுனா என்ற பெயரில் பேன்சி ஸ்டோர் மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர், வழக்கம்போல் நேற்று பணிகள் முடிந்தவுடன் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், இன்று காலையில் கடைக்கு திரும்பிய அவர் கடையின் பூட்டுகள் உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு, கல்லாவிலிருந்த இருபதாயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், பேன்சி ஸ்டோரில் இருந்த பொருட்களும் திருடு போயிருந்தன.
இது குறித்து சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் ஜெயராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்ததில் இளைஞர்கள் இருவர் கடைக்குள் புகுந்து பணத்தை திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் திருட்டில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்களை வைத்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: லாரி பேட்டரிகள் திருட்டு: சிசிடிவி காட்சியின் மூலம் விசாரணை!