கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டாஸ்மாக் ஊழியர் ராஜா என்பவர், சமூக விரோதிகளால் கடந்த 14ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கும், பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி இன்று தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து அரசுக்கு கிடைக்கும் 80 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டாஸ்மாக் தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் இன்று கோவை பீளமேடு பகுதியில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதால், கோவையில் நாளொன்றுக்கு அரசுக்கு வருவாயாகக் கிடைக்கும் ரூ.7 முதல் ரூ.8 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், "படுகொலை செய்யப்பட்ட ஊழியரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் அவரின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்க வேண்டும். இரவு எட்டு மணிக்கே கடையை மூட உத்தரவிடவும் அனைத்து டாஸ்மாக்கிலும் சிசிடிவி கேமரா பொருத்தவும் ஊரகப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறினார்.