கோயம்புத்தூர் மாவட்ட சிறு, குறு தொழில் அமைப்பினர், 19 நிறுவன தலைவர்களைக் கொண்ட குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிறு, குறு தொழில் அமைப்பின் கோயம்புத்தூர் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், "அரசு அறிவிக்கும் அறிவிப்புகள் குறு, சிறு தொழில்களை பொறுத்தவரை எவ்வித பயனும் அளிக்காத நிலையில் உள்ளது. ஊரடங்கிலிருந்து தளர்வுகளை ஏற்படுத்தினாலும் அது சிறு, குறு தொழில்களுக்கு பயன்படாத நிலையில் உள்ளது. கோயம்புத்தூர் மண்டல தொழிற்சாலைகளில் 40 விழுக்காட்டினர் தென் மாவட்ட தொழிலாளர்கள், 40 விழுக்காட்டினர் வட மாநில மக்களாக இருக்கின்றனர்.
தற்போது ஊரடங்கினால் தென் மாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றதால் திரும்ப வர இயலாத நிலை உள்ளது. வட மாநில தொழிலாளர்களும் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல முயன்று வருகின்றனர். எனவே, மத்திய அரசு அறிவித்த கடன் தொகையை எந்த அடிப்படையில் பிரித்துக் கொடுக்கப்படும் என்று தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், வாடகை கட்டடங்களில் தொழில் செய்யும் நிறுவனங்கள் பலவும் உள்ளன. அவை வாடகை செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்துவதற்கும் மூன்று மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது குறு நிறுவனங்களுக்கு நிவாரண கடன் தொகையாக உடனடியாக ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரியில் செலுத்தாததற்கு அபராதம் செலுத்திய தொகையை மீண்டும் திருப்பி அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க... ஊரடங்கு தளர்வுக்கு பின்னும் சிறு தொழில்துறையில் தொடரும் பாதிப்பு!