நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட கிராம பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால், வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
முன்னதாக இங்குள்ள பெண்கள் தனியார் சுய உதவிக் குழுக்களில் கடன் பெற்றுள்ளனர். இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமலில் உள்ள ஊரடங்கள் ஆகஸ்ட் மாதம் வரை கடனுக்கான வட்டி, அசல் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்தும், அதை மீறி கிராம மக்களிடம் நிதி நிறுவன ஊழியர்கள் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஆனைமலை பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இன்று (ஜூன் 19) திருவோடு ஏந்தி நூதன முறையில் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க...பிரதமர் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு