கோயம்புத்தூர்: சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை காளப்பட்டியிலும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியிலும் செயல்பட்டு வந்த ஹைட்ரோ வேலி சொலுஷன் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த மதியழகன் மற்றும் சிலர் தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்திற்கு கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீஸ் உள்ளிட்ட பணிகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதை அடுத்து ரவீந்திரன் அங்கு சென்று சில நாள்கள் தங்கி பணிகளை செய்து தந்துள்ளார். சில நாள்கள் கழித்து தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். பணம் முதலீடு செய்தால் நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் ஆகிவிடலாம் எனவும் பாலக்காடு பகுதியில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில் கட்டுமான பணிகளில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர்.
இதை நம்பிய ரவீந்திரன் 85 லட்சம் ரூபாய் வரை பல்வேறு தவணைகளாக கொடுத்துள்ளார். இதற்கிடையே கரோனா காரணமாக கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். நீண்ட நாள்கள் ஆகியும் கட்டுமான பணிகள் எதையும் மேற்கொள்ளாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவர் விசாரித்தபோது கட்டுமான பணிகள் மேற்கொள்ளாமல் ஹைட்ரோ வேலி நிறுவனத்தினர் மோசடி செய்தது தெரியவந்தது.
மேலும் ஹைட்ரோ வேலி நிறுவனத்தினர் இதேபோல மதுரை, ஈரோடு, சென்னை, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமானவரிடம் 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து ரவீந்திரன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த மதியழகன், ஊட்டியைச் சேர்ந்த ராம்கி என்கிற ராமகிருஷ்ணன், கேரளாவைச் சேர்ந்த ரகுமான் என்கிற கலீல் ரகுமான், சாம் பிரகாஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Viral Audio: காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்