கோயம்புத்தூர் மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். முடிதிருத்தும் தொழிலாளியான இவர், இடையர் பாளையத்தில் சிகை அலங்கார கடை வைத்துள்ளார். இவர் அவ்வப்போது கோவை அரசு மருத்துவமனையின் முன்பு உள்ள ஆதரவற்றோருக்கு முடி திருத்தம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இவரை ரஜினி தேவராஜ் என்றே அப்பகுதி மக்கள் அழைப்பார்கள்.
இன்று முதலே உலக மக்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர். எனவே, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஆதரவற்றோருக்கு ரஜினி தேவராஜ் இலவசமாக சிகை அலங்காரம் செய்து பார்ப்பவரை வியக்கவைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "10 ஆண்டுகளாக அரசு மருத்துவமனை முன்புள்ள ஆதரவற்றோருக்கு சிகை அலங்காரம் இலவசமாக செய்துவருகிறேன். என்னுடைய மன திருப்திக்காக இலவசமாக சிகை அலங்காரம் செய்கிறேன். எனது வாழ்நாளின் இறுதிவரை ஆதரவற்றோருக்கு நேரம் கிடைக்கும்போது இதுபோன்ற சிகை அலங்காரம் செய்வேன்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ரஜினி தேவராஜின் தன்னார்வ தொண்டை பாராட்டி பலரும் வாழ்த்துகள் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த போலி நிருபர்கள்.!