சேலம் தலைவாசல் பகுதியில் ஆசியாவின் பெரிய கால்நடைப் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தார்.
அப்போது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிஎன்பிஎஸ்சி தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் நடைபெற்ற முறைகேடு குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பணியை தேர்வாணையம் செய்து வருகின்றது” என்றார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவனை செறுப்பு கழற்ற வைத்த விவகாரம் குறித்து பேசிய அவர், “அவர் வயதானவர், காலில் சிக்கிய குச்சியை குனிந்து எடுக்க முடியாததால் பேரன் வயதிலிருந்த சிறுவனை உதவிக்கு அழைத்துள்ளார். அந்தச் செயலுக்கு அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். ஊடகங்கள் இதனைப் பெரிதுப்படுத்துவது வருத்தம் அளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு இருக்கின்றது எனத் தெரியவில்லை. அவர் ஒரு பக்தி மான். அவர் தனது சொந்த கருத்தைக் கூறி வருகிறார். அது அதிமுகவுடைய கருத்தில்லை. இதனை அமைச்சர் ஜெயக்குமாரும் தெளிவுபடுத்தியிருக்கிறார்” என்றார்.
9,11ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “பள்ளிகளில் அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால், தகுதியை எப்படி நிர்ணயம் செய்ய முடியும். மாணவனின் தகுதியை நிர்ணயம் செய்வதுதான் தேர்வு. தேர்வே எழுதாமல் அனைவரையும் தேர்ச்சி செய்துவிட்டால், அவருடைய தகுதி என்ன என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடும்” என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமைச் சட்டத்தால் நாடே பாதிக்கும் - கனிமொழி எச்சரிக்கை