கோயம்புத்தூர்: திருப்பூர், கோவை மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த நவம்பர் மாதம் அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதமும் இதர ரகத்திற்கு 20 சதவீதம் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
இந்த நிலையில், அந்தக் கூலி உயர்வினை கொடுக்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
![விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-03-powerloom-byte-7208104_01032022200926_0103f_1646145566_350.jpg)
இந்த பேச்சுவார்த்தையில் சோமனூர் ரகத்திற்கு 19 சதவீதமும் , இதர ரகத்திற்கு 15 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என உடன்பாடு எட்டப்பட்டது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 2) பொதுக்குழு கூடி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளனர். 52 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் நேற்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதையும் படிங்க: உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு: 'நான் முதல்வன்' புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்