கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலை தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து கேரளாவுக்கும், கேரள பகுதியிலிருந்து தமிழ்நாட்டிற்கும் வந்து செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இவ்வழியாக இரவு பகல் பாறாமல் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதியாகக் காணப்படுகிறது. இந்தச் சாலைப்பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரயில்வே கீழ்மட்ட பாலம் கட்டப்பட்டது.
பாலத்தின் கீழ் சாலை தரமாக அமைக்கப்படாததால் சாலையின் கான்கிரீட் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளன. இதனால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் அபாயம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று (நவ.09) அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொள்ளாச்சி கிழக்குக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துச்சாமி, காவலர்கள் மார்கண்டன், தினேஷ் ஆகியோர் இணைந்து சாலையில் இருந்த கம்பிகளை வெட்டியெடுத்தனர்.
![கம்பிகளை அகற்றும் காவல்துறையினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20191110-wa0032_1011newsroom_1573367699_431.jpg)
இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இல்லாமல் சென்றனர். காவலர்கள் சாலையை சீரமைக்கும் பணியைப் பார்த்த பொதுமக்கள் அவர்களின் செயலை வியந்து பாராட்டினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டியது நெடுஞ்சாலைத் துறையின் பொறுப்பு. சாலையில் நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டியது தனது துறையின் பணி இல்லை என தட்டி கழிக்காமல், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் விபத்து ஏற்படுத்தும் விதமாக நீட்டிக் கொண்டிருந்த கம்பிகளை அகற்றிய காவல் துறையினரின் பொறுப்புணர்வு பாராட்டத்தக்கது" என்றனர்.