கோயம்புத்தூர்: கோவையை அடுத்த தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் 4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வனச்சரகம் தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியில் வனக் களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்தப் பகுதியில் மூடப்பட்ட செங்கல் சூளையில், நாட்டு துப்பாக்கி ஒன்று பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, வனக் களப்பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். கோவை வன அலுவலர் அருண் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த செங்கல் சூளை சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது45) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரணையை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரத்தில் நிரந்தர முடிவு வேண்டும் - இலங்கை முன்னாள் எம்பி தர்மலிங்கம் சித்தார்த்தன்
இந்நிலையில், வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அவரது செங்கல் சூளை பகுதியில் மேலும் ஒரு நாட்டு துப்பாக்கி, 2 ஏர் கன் ரக துப்பாக்கி , பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய 30 தோட்டாக்கள், தோட்டா தயாரிப்பதற்காக 350 கிராம் கரிமருந்து ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், வனத்துறையினர் ஞானசேகரனிடம் இருந்து 4 துப்பாக்கிகள், தோட்டாக்கள், கரிமருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்து அவற்றையும், ஞானசேகரனையும் தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து, ஞானசேகரனிடம் சப் - இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஞானசேகரன் உரிமம் இல்லாமல் துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஞானசேகரனை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வெற்றிக்கு அச்சாரமிடும் வேலூர் பவளவிழா.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அழைப்பு!