தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல், 10 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தடையை மீறி இத்தகைய பொருட்கள் உபயோகத்தில் இருந்து வந்தன.
இதனைக் கண்டறியும் முயற்சியில் தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கடைகள், ஓட்டல் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
அந்த வகையில் கோவை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் கேண்டீனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதாக மாநகராட்சி அலுவலர்களுக்கு புகார் வந்தது.
இதையடுத்து, உதவி நகர் நல அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அலுவலர்கள் போலீஸ் கேண்டீனில் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், கேண்டீன் நிர்வாகிகளுக்கு ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும், பிளாஸ்டிக் பை உபயோகித்தால் கேண்டீனின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இங்கு பார்சல் தரப்படாது என்றும் பார்சலுக்கு பாத்திரம் எடுத்து வர வேண்டும் என்றும் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: போதை மாத்திரை கடத்திய மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!