இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பினைத் தடுக்க அனைத்து மாநிலங்களும் தங்களின் எல்லைகளை மூடின. கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் எல்லைகளான செமணாம்பதி, கோவிந்தாபுரம், கோபாலபுரம், வீரப்பகவுண்டன் புதூர், நடுப்புணி உள்ளிட்ட ஒன்பது சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டன.
இதனால் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குச் சென்றுகொண்டிருந்த பால், காய்கறி, அரிசி, கோழி உள்ளிட்ட உணவுப்பொருள்கள் தடைப்பட்டன. இதனால், கேரளாவின் திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், கேரளா நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுடன் நேற்று நடுப்புணி சோதனைச் சாவடியில் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடும் கேரளாவும் சகோதார மாநிலங்கள் என்பதால் பல இக்கட்டான நேரங்களில் தமிழ்நாடு கேரளாவுக்கு உதவிசெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரளாவுக்கு, தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள ஒன்பது சோதனைச்சாவடிகள் வழியாக உணவுப் பொருள்கள் கொண்டுச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு உணவுப் பொருள்களை கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அனுமதிச் சீட்டு வருவாய்த் துறை மூலம் அளிக்கப்படும். மேலும், தமிழ்நாட்டிலிருந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்படும்.
அதேபோல, அரிசி, காய்கறி இறக்கிவிட்டு தமிழ்நாடு திரும்பும் லாரிகளைச் சுத்தப்படுத்துவதுடன், வாகன ஓட்டிகளுக்கு கேரளாவில் கரோனா கண்டறிதல் சோதனை, உணவு உள்ளிட்ட வசதிகள் செய்துதருமாறு அம்மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'சுகாதாரப் பணியாளர்கள் நிஜ ஹீரோக்கள்'- பிரதமர் நரேந்திர மோடி