கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை வடிவேலம்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் கமலாத்தாள்(85). இவர், தனது முதுமைப்பருவத்திலும் அப்பகுதியில் கடந்த 30 வருடங்களாக சிறிய உணவகம் நடத்தி வருகிறார். குறிப்பாக, ஒரு இட்லியை ரூ.1க்கு விற்பனை செய்து வருகிறார். ஒரு ரூபாய் இட்லி என்றால் இன்றைக்கு உலகமே தெரியுமளவுக்கு கமலாத்தாள் பாட்டியின் புகழ் பரவி இருக்கிறது.
![மூதாட்டியை கெளரவிக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-03-idli-patti-awarded-collector-visu-7208104_10092019194912_1009f_1568125152_169.jpg)
அதில் அவர், முதல் 15வருடங்கள் இட்லியை 50 பைசாவுக்கும், அதன் பிறகு 15 வருடங்களாக இட்லியை 1 ரூபாய்க்கும் மக்களுக்கு விற்பனைக்கு கொடுத்து வருகிறார். வீட்டிற்கு வாங்கிச்செல்ல பாத்திரம் கொண்டு வந்தால் மட்டுமே இட்லி கொடுக்கிறார். பாட்டியின் சுவையான இட்லிக்கு அப்பகுதியைச் சுற்றியுள் ஊர்களில் இருந்து தினமும் அதிக பேர் வந்து செல்கின்றனர். பாட்டிக்கு ஆதரவாக அவரது பேரன் புருஷோத்தமன் இருந்து வருகிறார்.
பின்பு, இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் கு.ராசமணி, கமலாத்தாளை தனது முகாம் அலுவலகத்திற்கு வரவழைத்து, அவரது சேவையைப் பாராட்டி வாழ்த்தினார். பின்பு, தனது வீடு பழுதடைந்த நிலையில் இருப்பதாக கூறிய பாட்டிக்கு, மாவட்ட ஆட்சியர் பாரதப்பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்டித்தரப்படும் எனவும், தேவையான உதவிகளை செய்துதர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.