கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைகாரன் புதூர் பேரூராட்சிக்கு உட்பட்டது நாகுரூத்துபதி. ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் வரும் இந்தப் பகுதியில் மகா மலசர் இனத்தைச் சேர்ந்த 46 குடும்பங்கள் உள்ளன.
70 டிகிரி சாய்வில் அமைந்திருக்கும் இந்தக் கிராமம் பற்றியே மக்களுக்குத் தெரியாது. இங்குள்ள குழந்தைகள் ஐந்து கிலோ மீட்டர் நடந்து சென்று வேட்டைகாரன் புதூர் அருகே உள்ள மண்ணம் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றுவருகின்றனர்.
புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் வசிக்கும் பகுதியில், சர்வ சாதாரணமாக சிரித்த முகத்துடன் வரும் குழந்தைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனர். இவர்கள் காண்டூர் கால்வாயை கடந்துதான் மலை ஏற வேண்டும். 15 அடி நீளம், இரண்டரை அடி அகலம் உள்ள இரும்பு பாலத்தை கடந்து, இருசக்கர வாகனத்தை செடிகளிகளுக்கிடையே மறைத்து வைத்துவிட்டு, தங்களது ஊருக்கு செல்கிறார்கள்.
கரடு முரடாக இருக்கும் மலையில் ஏறத் தொடங்கும்போதே கால்கள் வலிக்க ஆரம்பித்துவிடும். அதை கண்டுகொள்ளாமல் மூச்சு வாங்க வாங்க ஒரு வித பயத்தோடு ஏறி 30 நிமிட நடைப் பயணம் மேற்கொண்டால் நாகுரூத்துபதியை அடையமுடியும்.
46 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் அங்கொன்றும், இங்கொன்றுமாக குடிசைகளை அமைத்து இந்தப் பகுதியில் வசித்துவருகின்றனர். மழை பெய்தால் வீட்டில் படுத்து உறங்கமுடியாத சூழலே இங்கு நிலவுகிறது. மழை காரணமாக மண் சரிவு அதிகளவில் ஏற்பட்டாலும், தங்கள் சிரமத்தை மறந்து வாழும் இம்மக்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியோடே கடத்துகின்றனர்.
குப்பைக் கிடங்காக மாறும் நெல்மடூர் கிராமம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?
வாழ்வில் பல நாள்களை நடந்தே கடத்தும் இம்மக்கள் உடல் பருமன் என்றால் என்ன என கேள்வி எழுப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் இவர்கள் அவ்வளவு மெலிந்த தேகத்துடன் காணப்படுகின்றனர். இருப்பினும் ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள்.
சோலார் விளக்குகள் பழுதடைந்ததால், மாலை வேலைகளில் படிக்க சிரமப்பட்டாலும், வீட்டைவிட்டு வெளியே வர இம்மக்கள் அச்சப்படுவதே இல்லை. இருட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதார்த்தமாக அவர்களது இலக்கை அடைய நகர்ந்துசெல்கின்றனர்.
இவர்கள் தங்களது வீட்டருகே சிறிய அளவில் விவசாயம் செய்தும், ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தென்னை, கடலை தோட்டங்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டும் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு 350 ரூபாய் வரை இவர்களுக்கு கூலி கொடுக்கப்படுகிறது.
இதுகுறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் கதிர்வேல் நம்மிடம் கூறுகையில், “யானையை விரட்டும் வேலை, மட்டையை எடுக்கும் வேலைக்குதான் நாங்கள் செல்கிறோம்.
ரேஷன் அரிசியை வேட்டைகாரன் புதூரில் வாங்கி வண்டிவைத்து காண்டூர் கால்வாய்க்கு கொண்டுசென்று தோளில் தூக்கிவைத்து செங்குத்தான மலைப் பாதையில் கொண்டு செல்வோம்.
ஆனால் குழந்தைகள் 5 கிலோ மீட்டர் காட்டுப் பாதையில் சென்று படித்து வருகின்றனர். அதற்கு அரசு வாகன வசதி செய்துகொடுக்க வேண்டும். மூன்றடி அகலம் மட்டுமே உள்ள காண்டூர் கால்வாயை கடந்து செல்லும்போது இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக எனது மகன் உயிர் தப்பினான். ஆனால் இருசக்கர வாகனம் கால்வாயில் அடித்து செல்லப்பட்டது.
ஊரடங்கு: பசியில் வாடும் கிராமம்
இதுபோல் தந்தை-மகன் உள்ளிட்ட மூவர் காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தனர். எம்ஜிஆர் காலத்தில் கொடுத்த சோலார் மின்விளக்குகள் தற்போது பழுதடைந்துள்ளன.
வனத்துறையினர் யானையை விரட்டவும், மின்சார வயர்களில் சிக்கியுள்ள மரங்களை வெட்டவும் எங்களை பயன்படுத்துகின்றனர். பதினைந்து ஆண்டுகள் வேட்டை தடுப்பு காவலராகப் பணிபுரிந்தும் இதுவரை என்னை பணிநிரந்தரம் செய்யவில்லை.
கிராமத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட அவசர மருத்துவ வசதிக்கு பாதிக்கப்பட்டவரை தொட்டிலில் கட்டி தூக்கி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
50 ஆயிரம் ரூபாய் இருந்தாலே மின்சாரத்தை விட மகா மலசர் இன மக்கள் பெரிதாக நினைக்கும் காண்டூர் கால்வாய்க்கு பாலம் அமைக்க முடியும் என்கிறார்கள்.
இதையும் படிங்க... மரண பயத்துடன் தட்டிப்பாலத்தைக் கடக்கும் மக்கள்: நிறைவேறாத 50 ஆண்டுகால கோரிக்கை!