கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதில், ரேணுகா மற்றும் திவ்யா ஆகியோர் இங்கு ஊழியராக பணியாற்றி வருகின்றனர். நேற்று மதியம் பணியில் இருந்த தங்களை, முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர், பலமாகத் தாக்கி அங்கிருந்த சுமார் 812 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கப்பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக அப்பெண்கள் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இன்று காலை முத்தூட் மினி பைனான்ஸ் சார்பில், கோவை ராமநாதபுரம் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வெளியாட்களாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்தது.
மேலும், தாக்கப்பட்டதாகக் கூறிய இரண்டு பெண் ஊழியர்களிடம் காவல் துறையினர் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இரண்டு பெண்களே நகையை கொள்ளையடித்து அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்றதாக நாடகமாடுகின்றனர் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இரண்டு பெண்களிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டும் வருகின்றனர்.
முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்திற்கு கீழ் உள்ள அரிசிக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் ஒரு நபர் வந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.