கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சூலூர் உள்ளிட்ட பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், பொள்ளாச்சியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவடையாத நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இது குறித்து அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக கோவை மாவட்ட திமுக பொருப்பாளர் தென்றல் செல்வராஜ் கூறுகையில், “சில தினங்களுக்கு முன்பு அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பார்களை தடுக்கக் கோரி திமுகவினர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதற்கு காவல் துறையினர் திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மக்கள் நலப் பிரச்னைகளைத் தட்டிக்கேட்கும் திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதற்கு வலியுறுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை கண்டித்து, கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில், 100க்கும் மேற்பட்டோர் திருவள்ளுவர் திடலில் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், காவல் துறையினருக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.
மேலும், அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 'ஆட்சி மாறும் மறுநாளே முதலமைச்சர், அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி'