கோயம்புத்தூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "திமுக அரசில் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. ஜவுளித் தொழில் நலிவடையும் சூழலுக்கு காரணம் திமுக கொண்டு வந்த மின் கட்டண உயர்வு தான்.
வீடுகளுக்கும் 3 மடங்கு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். ஜவுளித்துறை வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே வேங்கை வயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து இருந்து இருந்தால் நெல்லையில் வன்கொடுமை சம்பவம் நடந்து இருக்காது. பொருளாதாரம் குறைவாக உள்ளது என்று ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தாக்கி கொள்கிறார்கள்.
யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 1000க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்களை நீக்கி தொழில் துறையினருக்கு ஆதரவான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாஜகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் இன்னும் வேகமாக வேலை செய்வார்கள். அனுப்பும் கோப்புகளுக்கு எல்லாம் கண்ணை மூடி கை எழுத்து போடுவது ஆளுநர் வேலை இல்லை.
ஆளுநர் எல்லாவற்றிலும் கையெழுத்திட்டு விட்டால் இவர்களுக்கு நல்லவர்கள். ஆளுநர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதன் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும். ஆளுநரை மிரட்டும் வகையில் வேலை செய்தால் எடுபடாது. குறைந்த விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் மின் கட்டணம் எல்லாம் குறைவு.
தொழில் துறையை ஊக்குவிக்க தவறுகிறது தமிழ்நாடு அரசு. மத்திய அரசு கொடுக்க வேண்டியவற்றை முறையாக கொடுத்து வருகின்றது. பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் செயலை கேரள அரசும், தமிழக அரசும் செய்து வருகின்றது. ஆளுநரைப் பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது.
ஆளுநரை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வது, ஆளுநரை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது எல்லாம் செல்லுபடியாகாது. ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் உள்ளன. அதை ஆளுநர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்" என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறினார்.
இதையும் படிங்க:அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமானவரி சோதனை!