கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கோத்தகிரி செல்லும் மலைப்பாதையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று உடல் சிதைந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வன பணியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வன பணியாளர்கள் விரைந்து வந்தனர். உயிரிழந்த நபர் யானையால் தாக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.
அதன் பின்னர், வன பணியாளர்கள் இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதனைத்தொடர்ந்து காவல் துறையினர் இறந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இரவு நேரத்தில் அப்பகுதியில் தனியாக சுற்றிவருபவர் என்பது தெரியவந்தது. மேலும் அவரது பெயர், ஊர் என்னவென்று தெரியாததால் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மின்கம்பி அறுந்து விழுந்து பெண் உயிரிழப்பு