கோவை, காந்திபுரம் மேம்பாலத்தில் செல்போனில் சீரியல் பார்த்தவாறு வாகன ஓட்டி ஒருவர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியதை சக வாகன ஓட்டி ஒருவர் காணொலிப் பதிவு செய்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இந்தக் காணொலி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக கோவை மாநகர போக்குவரத்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் காணொலியில் பதிவாகியிருந்த இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு அதன் உரிமையாளர் கோவை, கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (35) என்பதை கண்டறிந்த காவலர்கள், அவரை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
சீரியல் பார்த்தபடி வேகமெடுத்த பைக்
இந்த விசாரணையில் அவர் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவதும், நேற்று (ஜூலை.30) இரவு பணி முடித்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது தனது செல்போனில் ஹாட்ஸ்டார் செயலி மூலம் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா சீரியலின் இரண்டாம் பாகத்தை பார்த்து ரசித்தபடியே இருசக்கர வாகனத்தை அதிவேகமாக அவர் இயக்கிதும் தெரிய வந்தது.
3 பிரிவுகளில் வழக்கு
இதனையடுத்து அவர் மீது அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து 1,200 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிய காவலர்கள் இவ்வாறு வாகனம் ஓட்டக்கூடாது எனவும் அவரை எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: ’ரஜினி, கமலை தாண்டி திரையில் ஜொலித்த ஹீரோ’ - ஹேப்பி பர்த்டே சரத் பாபு!