கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஏ.டி காலனியில் தொழிலதிபர் வீட்டின் தடுப்பு சுவர் அருகில் உள்ள வீடுகளின் மேல் விழுந்து வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த சிறுமிகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்து உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வரவுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
நேற்றைய தினம் உயிரிழந்தவர்களின் உடலை வாங்க சில அமைப்புகள் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்புக்கு நிகரான பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், மத அடிப்படைவாதிகள் ஆகியோரால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், பாதுகாப்பை பலப்படுத்தும் படி காவல் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த்முரளி தலைமையில் மேட்டுப்பாளையத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசின் அலட்சியத்தால் 17 பேர் உயிரிழப்பு - ஸ்டாலின்!