கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள அடர்ந்த வனப்பகுதிகளிலுள்ள செட்டில்மென்டுகளில் காடர், முதுவர், புலையர், இருளர், மலசர், மலைசார் என ஆறு பிரிவு மக்கள் வசித்துவருகின்றனர். வன வாசிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாகவும் குடியிருக்க வீடுகள், விவசாய நிலத்திற்கு 2006 வனஉரிமைச் சட்டத்தின் படி பட்டா வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் இம்மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதையடுத்து கோவை நோக்கி நடைபயணத்தைத் தொடங்கினர். அவர்களிடம் வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலர்கள் வராததால் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் பழங்குடியின மக்கள் கோவை நோக்கி நடைபயணத்தைத் தொடங்கியதால் காவல் துறையினர் அவர்களை தடுத்துநிறுத்தி கைதுசெய்தனர்.
சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மன்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வால்பாறை வணிகர் சங்கத்தினர் பழங்குடியின மக்களைச் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரவித்தனர். பழங்குடியினர் கைதைக் கண்டித்து வால்பாறையில் கடைகள் அடைக்கப்பட்டன.
வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'விரைவில் சட்டம் வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நிச்சயம்'