உலகம் முழுவதும் 2010ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் உலகளவில் குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அந்தவகையில், உலக புலிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, கோவை சிஎம்எஸ் கல்லூரியின் சார்பில் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது WTF அமைப்பு உலகளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 4000 என்பதை வலியுறுத்தும் விதமாக WTF 4000 என்ற வரைபடத்தை போன்று மாணவ, மாணவிகள் புலிகளின் முகமூடி அணிந்து அணிவகுத்து நின்றனர். இதைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த கௌதம் மேனன், பால் ஆகியோர் புலிகள் பாதுகாப்பை வலியுறுத்தி கார் மூலம் தங்கள் பயணத்தை தொடங்கினர்.

கார் மூலம் உலகை சுற்றி வந்த கோவையைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண் இதனை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பயணமானது கோவையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் வழியாக சீனா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், ரஷ்யா, ஹங்கேரி, ஜெர்மன், இத்தாலி என சுமார் 24 நாடுகளில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு பிரான்ஸில் முடிவடைகிறது.
65 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் சுமார் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க இருப்பதாக உலக புலிகள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். புலிகள் பாதுகாப்பில் அனைத்து தரப்பினரும் கைகோர்க்க வேண்டும் என இதில் பங்கேற்ற மாணவ மாணவிகள் வலியுறுத்தினர்.
இதேபோல், காடுகளை காப்பது, புலிகளை அழிவிலிருந்து மீட்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என பொள்ளாச்சி வனத்துறை சார்பில் புலிகள் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வனத்துறை வேட்டை தடுப்புக் காவலர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
மேலும், சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் புலிகள், சிறுத்தை, யானைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் அரசுப்பள்ளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.