கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் வனப்பகுதியில் இருந்து ஐந்து காட்டு யானைகள் வெளியேறி விவசாய நிலத்திற்குள் வந்துள்ளன. இதுகுறித்து நரசிபுரம் வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்தனர்.
அங்கு அவர்கள் சுற்றித்திரிந்த காட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, பரமேஸ்வரன்பாளையத்திலுள்ள ஆனந்தன் என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை நோக்கிச் சென்றன. இதனால், அதனைக் கடந்து செல்ல யானைகள் மிகவும் சிரமப்பட்டன.
அதில் ஒரு குட்டி யானை மின்வேலியில் இடித்து பின்னே வந்தது. நல்வாய்ப்பாக மின்வேலியில் மின்சாரம் பாயாததால் குட்டி யானை உயிர் தப்பியது. மேலும், யானைக் கூட்டத்தை பார்த்த அப்பகுதி மக்கள் யானைகள் வராமல் தடுக்க சத்தமிட்டனர்.
அதில், ஒரு குடும்பத்தினர் மின் வேலியை மிதித்துச்செல்லும்படி யானைக்கூட்டத்துக்கு அன்பு கட்டளையிட்டனர். பின்னர், காட்டு யானைகள் அவர்கள் சொன்னதை கேட்டு புரிந்துகொண்டதுபோலேயே அங்கிருந்து நகர்ந்து சென்றன. இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் இரவு நேரத்தில் உலவும் சிறுத்தை- ஷாக்கிங் வீடியோ!